Showing posts with label விபத்து போக்குவரத்து. Show all posts
Showing posts with label விபத்து போக்குவரத்து. Show all posts

Saturday, 5 May 2012

Speed Breakers on Roads

தமிழக உள்ளூர் சாலைகளில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த ஏற்படுத்தப்படும் வேகத்தடைகள், விதிகளுக்கு புறம்பாக அமைக்கப் படுவதால், விபத்துகள் அதிகம் ஏற்படுகின்றன.

உள்ளூர் சாலைகளில் விபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக, தேவையான இடங்களில் வேகத்தடைகள் ஏற்படுத்தப் படுகின்றன. பள்ளிகள், சாலை குறுக்கீடுகள், குடியிருப்புப் பகுதி சாலைகளிலும், இவை அமைக்கப் பட்டு உள்ளன.

என்ன சொல்கிறது விதி?இந்தியா முழுமைக்குமான, வேகத்தடை குறித்த கட்டுப்பாடுகளை, "தி இந்தியன் ரோட்ஸ் காங்கிரஸ்' என்ற அமைப்பு முடிவு செய்கிறது. இதிலுள்ள, "போக்குவரத்து பொறியாளர்கள் குழு' கூடி, விதிமுறைகளை வரையறுக்கின்றனர்.
பிப்., 1986ம் ஆண்டு, போபாலில் கூடிய இந்த குழு, வேகத்தடை அமைப்பது
குறித்த விதிகளை வெளியிட்டது. அதில் உள்ள தகவல்:
* நகரப் பகுதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் இருக்கும் தெருக்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, வேகத்தடைகள் அமைக்க வேண்டும். ஓட்டுனர்களின் கவனத்துக்கு தெரியும்படி, இதற்கான எச்சரிக்கை அறிவிப்புகள் அமைக்கப்பட வேண்டும்.
* சாதாரண வாகன போக்குவரத்துள்ள சாலைகளில், வேகத்தை மணிக்கு 25 கி.மீ., அளவுக்கு குறைக்க, 3.7 மீ., நீளத்துக்கு, 10 செ.மீ., உயரத்துக்கு வேகத்தடை அமைக்கப்பட வேண்டும்.
* டிரக்குகள், பேருந்துகள், பெரிய "வீல் பேஸ்' கொண்டிருப்பதால், வேகத் தடைகளை கடப்பது சிரமம் என உணரப்பட்டு, 1.5 மீ., கொண்ட நீளமான தடைகள் அமைக்க பரிந்துரைக்கப் பட்டது.
* சில இடங்களில், வாகன வேகத்தை முழுவதுமாக குறைக்கும் நோக்கில், 100 மீ., அல்லது 120 மீ., பகுதிக்குள், குறிப்பிட்ட இடைவெளியில் நான்கு வேகத்தடைகளும் அமைக்கலாம்.
* "டி' அமைப்பில் இணையும் சாலைகள், ரயில் பாதைகள் குறுக்கே வரும் இடங்களில், வளைவான சாலைகளில், வேகத்தடைகள் அமைக்கப்பட வேண்டும்; பாலங்களில் வேகத்தடைகள் அமைக்கக் கூடாது.

காற்றில் பறக்கும் விதிகள்:ஆனால், இந்த விதிகள் பெரும்பாலும் பின்பற்றப் படுவதில்லை. சாலைகளில் எந்த இடத்திலும், விதிமுறைகளில் கூறப்பட்டுள்ள உயரத்தில் வேகத்தடைகள் அமைப்பதில்லை. சில இடங்களில், ஒரு அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.அதேபோல், உள்ளூர் நெடுஞ்சாலைகளில் மட்டுமே, வேகத்தடை மற்றும் தொடர் உயரத்தடை அமைத்து உள்ளதற்கான எச்சரிக்கை பலகைகள், ஆங்காங்கே வைக்கப் பட்டுள்ளன. குடியிருப்புப் பகுதிகளில் எச்சரிக்கை பலகையோ, சாலைகளில் ஒளிரும் அமைப்போ, எதுவும் இருப்பதில்லை.

எச்சரிக்கை அமைப்பு: வேகத்தடைகள் அமைத்துள்ளதை, வாகன ஓட்டிகள் அறிந்து கொள்ளும் வகையில், முதல் வேகத்தடை அமைந்துள்ள இடத்துக்கு, 40 மீ., முன்பாக, அதற்குரிய எச்சரிக்கை பலகை இருக்க வேண்டும்.வேகத்தடைகள் மீது கறுப்பு, வெள்ளை பூச்சு இருக்க வேண்டும். இரவு நேரத்தில் தெளிவாக தெரியும்படி, ஒளிரும் பூச்சு மற்றும் தேவையான ஒளிரும் சாதனமான, "கேட்ஸ் ஐ' அமைப்புகளும், அதில் தேவை. அதேசமயம், வாகனங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வண்ணம், அவை அமைய வேண்டும்.

Thanks to Dinamalar 5.5.12