Friday 2 March 2012

மோட்டார் வாகனச் சட்டம்


குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் பலமடங்கு அபராதம் மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாகிறது

மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதைத் தொடர்ந்து நாடு முழுவதும் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகைகள் அதிகரிக்க உள்ளன. இந்த புதிய சட்ட மசோதா, பட்ஜெட் கூட்டத்தொடரின் போது
மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவில், வாகனத்தில் சீட் பெல்ட் அல்லது ஹெல்மெட் அணியாமல் சென்றாலோ, சிவப்பு நிற சிக்னலை மதிக்காமல் சென்றாலோ ரூ.500 அபராதமாக விதிக்கப்படும். இந்த சட்ட மசோதாவில், மொபைல் போன் பேசிக் கொண்டே வாகனம் ஓட்டுபவர்களுக்கும் ரூ.500 அபராதம் விதிக்கும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இந்த சட்ட திருத்த மசோதாவின்படி, தற்போதுள்ள அபராதத் தொகைகள் பத்து மடங்கு அளவிற்கு அதிகரிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. குடித்துவிட்டு வாகனம் ஓட் டினால் அபராதம் மற்றும் சிறைத் தண்டனை வழங்கவும் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் படி, ரத்தத்தில் கலந்துள்ள ஆல்கஹாலின் அளவைப் பொறுத்து இரண்டாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அல்லது ரூ.5,000ம் அபராதமோ அல்லது இரண்டுமே விதிக்க சட்டம் வழி செய்யும். தொடர்ந்து போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கு ரூ.1500 வரை அபராதம் விதிக்கப்படலாம். முதல் முறையாக செல்போன் பேசிக் கொண்டு சென்றால் ரூ.500ம், தொடர்ந்து அவ்வாறு செய்தால், அவர்களுக்கு ரூ.5,000 வரையும் அபராதம் விதிக்க சட்ட மசோதா வகை செய்கிறது. அபராதத் தொகைகள் அதிகரிப்பதன் நோக்கமே, சாலையில் போக்குவரத்து விதிகளை அனைவரும் பின் பற்றவும், சாலை விபத்துக்களைக் குறைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
                                                                                      நன்றி தீக்கதிர்.

No comments:

Post a Comment